Tuesday, February 27, 2007

வடிவுக்கு போறாத காலம்:(

(சாலையின் வலப்புறத்திலிருந்து நம்ம வடிவு வந்துகொண்டிருக்கிறார். வானத்தைப் பார்த்தவாறு தனக்குள் பேசிக்கொள்கிறார்)

வ.வே: யப்பா சாமி, நா இன்னைக்கி போற காரியத்த நீதாம்பா நல்லபடியா முடிச்சித்தரணும். முடிச்சி தந்தேன்னா, திரப்பி வரப்ப ஒன்னோ ரெண்டோ, என்னால முடிஞ்சத உங்கோயில் உண்டியல்ல போடறேம்பா..

(எதிரில் வரும் நபர் அவரை கடந்து செல்ல, வடிவேலு அவர் காலரைப் பிடித்து தன் பக்கம் இழுத்து அவருடைய கன்னத்தில் அறைகிறார்.)

வழியில் சென்றவர்: (கோபத்துடன்) யோவ். உனக்கென்ன பைத்தியமா? ஏன்யா சும்மா போறவன பிடிச்சி அடிக்கறே?

வ.வே: டேய் நா யாரு?

வ.செ: யாருன்னா?

வ.வே: நான் யார்றா? (தன் நெஞ்சில் கைவைத்து) நானு, நானு.

வ.செ: யோவ் சுத்த இவனா இருக்கியே.. பேசாம ரோட்ல போயிட்ருக்கவன இழுத்து பிடிச்சி கன்னத்துல அறஞ்சிட்டு.. நா யாரு, நா யாருன்னு கேக்கற?

வ.வே: (கன்னத்தில் அறைகிறார்) சரியா பாத்து சொல்லு.. நா யாருன்னு தெரியல?

வ.செ: (அழுகிறான்) யோவ் தெரியலையா.. நீதான் யார்னு சொல்லித் தொலையேன்.

வ.வே: உண்மையிலயே நா யாருன்னு தெரியலை?

வ.செ: தெரியலைய்யா..

வ.வே: சரி நீ போ..

வ.செ: (தனக்குள்) யார்றா இவன்? ரோட்ல போய்க்கிட்டிருந்தவன நிறுத்தி கன்னத்துல அடிக்கிறான். ஏன்டா அடிச்சேன்னு கேட்டா நான் யார்ராங்கறான். தெரியலன்னு சொன்னா சரி போடாங்கறான். சுத்த பைத்தியக்காரனாயிருப்பான் போலருக்கே.. இவன்கிட்ட நின்னு பேசினதே தப்பு.. போயிருவம்.. (திரும்பி திரும்பி பார்த்தவாறே அடிபட்ட கன்னத்தை தடவிக்கொண்டு செல்கிறான்)

வ.வே: (தனக்குள்) அப்பாடா. இந்த ஊர்ல நம்மளை தெரிஞ்சவன் யாருமில்ல போலருக்குது. தைரியமா நடமாடலாம்.

(காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறார். அலட்சியமாக சாலையில் போவோர் வருவோரை பார்க்கிறார். கால்களை அகல வைத்து தெனாவட்டாக சாலையின் நடுவில் நடக்கிறார். ஏற்கனவே அவர் ஒருவனை அடித்ததை பார்த்தவர்கள் அவரை விட்டு சற்று தள்ளியே செல்கின்றனர். அதைப் பார்த்த வடிவேலு ‘அது.. அந்த பயம் இருக்கணும்..’ என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார். திடீரென்று பின்னாலிருந்து சைக்கிளில் வந்த பார்த்திபன் அவர்மேல் இடிக்க முகம் குப்புற விழுகிறார். அவர் அணிந்திருந்த வெள்ளை சட்டை, வெள்ளை முழுவதுமாக அழுக்கடைகிறது. கீழே விழுந்தவர் கோபத்துடன் எழுந்து தன்னை இடித்துவிட்டு நிற்பவனை ஓரக்கண்ணால் பார்க்கிறார். அடுத்த நொடியில் அவர் முகம் இருளடைகிறது. தனக்குள் பேசிக்கொள்கிறார்) ஐயோ, இவனா? நம்ம எங்க போனாலும் மோப்பம் பிடிச்சிக்கிட்டு வந்திர்றானடா சாமி. இன்னைக்கி என்னல்லாம் குன்டக்க மன்டக்கன்னு பேசப் போறானோ தெரியலையே. திறக்கப்படாது.. அவன் என்ன பேசுனாலும் நம்ம வாயவே தெறக்கப்படாது..

பார்த்திபன்: (சைக்கிளில் அமர்ந்தவாறே) டேய்.. என்ன, ரோடு உனக்காகத் தான் போட்ருக்குன்னு நெனப்பா உனக்கு? நடு ரோட்ல பெரிய இவன் மாதிரி.. யார்றா நீ?

வ.வே: (அவனுக்கு முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறான்) அட ஒன்னுமில்லப்பா.. நான் ஊருக்கு புதுசு.. நீ போ.. (அந்த இடத்தைவிட்டு வேகமாக செல்ல முயல்கிறார்)

பார்த்தி: டேய் நில்றா! நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்கே?

வ.வே: (அப்படியே நிற்கிறார். திரும்பாமலே பதில் சொல்கிறார்) நீ என்ன கேட்டே, நான் யாருன்னுதானே? அதான் நான் ஊருக்கு புதுசுன்னு சொல்லிட்டேன்லயா.. பிறவென்ன? (தனக்குள்) விடமாட்டான் போலருக்குதே சாமி..

பார்த்தி: ஏன், முகத்த பாத்து பேசமாட்டீங்களோ?

வ.வே: என் முகத்த பாத்து என்னய்யா பண்ணப் போறே?

பார்த்தி: அத நான் பாத்துக்கறேன். நீ முதல்ல திரும்பி என்ன பாத்து பேசுடா.

வ.வே: (திரும்பி முழுவதுமாக சுற்றிக்கொண்டு மீண்டும் முதுகையே காண்பிக்கிறான்) போதுமா? பாத்துட்டேல்ல? நான் போட்டா? அர்ஜண்டா ஒரு சோலிக்கி போயிட்டிருக்கேன்யா? என்ன உட்டுடேன் (அழுகிறான்).

பார்த்தி: டேய்.. முகத்த காட்றான்னா மறுபடியும் முதுகையே காட்றே? என்ன நக்கலா? அதுவும் ஏன்கிட்டயே?

வ.வே: இப்ப என்னய்யா பண்ணணும்கற?

பார்த்தி: ஸ்லோ மோஷன்ல திரும்பு.

(வ.வே ஸ்லோ மோஷன்ல மீண்டும் முழு வட்டமடித்து திரும்ப முயல.. பார்த்திபன் அவருடைய தோளைப் பிடித்து நிறுத்துகிறான். வடிவேலு தன் இரு கண்களையும் ஒன்றரை கண்ணுள்ளவன்போல் மாற்றிக்கொண்டு நிற்கிறார்.)

பார்த்தி: (ஆச்சரியத்துடன்) டேய் நீயா?

வ.வே: நீயான்னா? நீ நெனக்கற ஆள் நானில்லையா? என்ன உட்டுறு.

பார்த்தி: டேய்.. நான் நீ யாருன்னு நெனச்சேன்னு உனக்கெப்படி தெரியும்? நீ நான் நீன்னு நெனச்ச ஆள்தான் நீ?

வ.வே: (தனக்குள்) மறுபடியும் ஆரம்பிச்சிட்டன்யா. இப்படி குண்டக்க மண்டக்கன்னு பேசி எத்தனை நாளைக்கித்தான் இவன் என் கழுத்த அறுக்க போறான்னே தெரியலையே (பார்த்திபனைப் பார்க்கிறான்) என்னய்யா சொல்ற? ஒரெழவும் விளங்க மாட்டேங்குதே..

பார்த்தி: சரி மெதுவா உன் மர மண்டைக்கு விளங்கமாதிரி சொல்றேன். நீ நான் நீன்னு நெனச்ச ஆள்தானே நீ?

வ.வே: நீ.. நீன்னு.. எளவு வரமாட்டேங்குதே.. சரி ஏதோ ஒன்னு.. வேணாம். என்ன விட்டுறு..

பார்த்தி: என்ன வேணாம்?

வ.வே: என்ன வேணாம்னா?

பார்த்தி: இல்ல.. இப்ப ஏதோ வேணாம்னியே?

வ.வே: நானா? எப்ப?

பார்த்தி: டேய்.. என்ன விளையாடறியா? இப்ப நீதானடா வேணாம் என்ன விட்டுருன்னே? அதான் கேக்கறேன். சொல்லு, என்ன வேணாம்?

வ.வே: (அழுகிறான்) யோவ், ஏதோ ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா?

பார்த்தி: பேச்சுக்கா? அதென்ன பேச்சுக்கு? நாங்க மட்டும் பேசாமயா சொல்றோம்? சொல்றா?

வ.வே: (தனக்குள்) என்னடா இவன்.. முன்னால போன முட்டுறான்.. பின்னால போன ஒதைக்கிறான்.. இன்னைக்கி விடிஞ்சாப்பலதான்.. இப்ப என்ன கேக்க வறாங்கறத மறந்து போயிருச்சே..

பார்த்தி: (வடிவேலுவின் தலையில் தட்டுகிறார்) டேய் என்ன சத்தத்தையே காணோம். சரி, அத விடு.. நீ நான் நெனச்ச ஆளா இல்லையா அத சொல்லு..

வ.வே: (முறைக்கிறார்)முதல்ல நான் யாருன்னு நீ நினச்சு பேசிக்கிட்டிருக்க.. அதச் சொல்லு..

பார்த்தி: டேய், என்னையே மடக்கறியா? மவனே.. அப்ப எதுக்கு நீ நெனச்ச ஆள் நான் இல்லன்னு சொன்னே?

வ.வே: நான் ஒரு குத்து மதிப்பா கேக்கறியாக்கும்னு சொன்னேன்.

பார்த்தி: குத்து மதிப்பா? அதென்ன குத்து, மதிப்பு..

வ.வே: யோவ் ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா..

பார்த்தி: டேய் சொன்ன டையலாக்கையே சொன்னே.. கொன்னுருவேன். சரி அதையும் விடு.. நான் சொல்றேன். நீ அந்த துபாய் கக்கூஸ் பார்ட்டிதானே..

வ.வே: (தனக்குள்) ஹா.. மாட்டிக்கிட்டம்யா.. எமகாதகானாயிருப்பான் போலருக்குதே.. (பார்த்திபனைப் பார்க்கிறார்) துபாயா? கக்கூசா? நீ என்னய்யா சொல்றே? நான் மெட்றாசே பாத்ததுல்ல.. இதுல துபாயில போயி.. நீ நெனக்கற ஆளு நான் இல்லையா.. உலகத்துல ஒருத்தன மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு நீ கேட்டதில்ல அதுல ஒருத்தன் நான்னு வச்சிக்கயேன்..

பார்த்தி: சரி வச்சிக்கறேன்.. அதுக்குன்னு அவன் மேல அடிச்ச அதே கக்கூஸ் நாத்தமுமா ஏழுபேர் மேலயும் அடிக்கும்?

வ.வே: (தன் மேல் முகர்ந்து பார்க்கிறான். எனக்கு அடிக்காத நாத்தம் இவனுக்கு மட்டும் எப்படி அடிக்குதுன்னே தெரியலையே)

பார்த்தி: என்ன அடிக்குதா?

வ.வே: எது?

பார்த்தி: அதான்டா.. மோந்து பாத்தியே.. அது..

வ.வே: (விறைப்புடன் திரும்பி பார்க்கிறான்) ஆமாய்யா நீ நெனக்கற ஆளு நான்தான்.. அதுக்கு என்ன இப்ப?

பார்த்தி: (வியப்புடன்) தோ பார்றா, கோபங்கூட வருமா உனக்கு?

வ.வே: பின்னே.. நான் என்ன ஒன்னுக்கும் பெறாத ஆளுன்னு நினைச்சியா.. வேணாம். சொல்லிட்டேன்.

பார்த்தி: ஒன்னுக்கு போவாத ஆளா? அது வேறயா? தள்ளி நில்றா!

வ.வே: (தனக்குள்) ஐயோ.. நானே வாய் குடுத்துட்டு, குடுத்துட்டு மாட்டிக்கறனே.. (கன்னத்தில் அடித்துக்கொள்கிறார்) சும்மா வாய வச்சிக்கிட்டு இரேன்டா..

பார்த்தி: டேய் யார சொல்றே?

வ.வே: என்னது நானா?

பார்த்தி: இப்ப ஏதோ வாய்க்குள்ளயே சொன்னியே?

வ.வே: (வாயை மூடிக்கொள்கிறார் இல்லை என்று தலையை அசைக்கிறார்).

பார்த்தி: (வடிவேலுவின் பின்னந்தலையில் அடிக்கிறார்) வாயை தொறந்து சொல்றா?

வ.வே: (கோபத்துடன் முறைக்கிறார்) யோவ். பேசிக்கிட்டிருக்கப்பவே கையை நீட்டுற? வேணாம்.. சொல்லிட்டேன்.

பார்த்தி: என்ன வேணாம்? என்ன சொல்லிட்டே? அடிக்கடி இதே டயலாக்க சொல்றே? என்ன வேணாம்? நான் இந்தான்னு எதையோ குடுத்தா மாதிரி!

வ.வே: (கைகளை தலைக்குமேலே உயர்த்தி கும்பிட்டவாறு தரையில் விழுகிறான்) ஐயோ சாமி.. தெரியாம சொல்லிட்டேன்.. ஆள விடுய்யா..

பார்த்தி: (வலது கரத்தை உயர்த்தி சீர்வதிக்கிறார்) தீர்க்காயுசு பவ.. நீ சாவாம நூறு வருஷம் இரு.. (தனக்குள்) அப்பத்தான அடிக்கடி எங்கிட்ட மாட்டுவே..

வ.வே: (எழுந்து முற்றிலும் அழுக்காகிப்போன தன் உடைகளைப் பார்க்கிறான்) இப்ப திருப்தியா?

பார்த்தி: (வடிவேலுவை மேலும் கீழும் பார்க்கிறார்) இப்பத்தான் சரியான கக்கூஸ் பார்ட்டி மாதிரி இருக்கே.. இப்படியோ போ..

(வ.வே தலையை குனிந்தவாறே சாலையின் ஓரத்துக்கு சென்று ஓரக்கண்ணால் பார்த்திபனைப் பார்க்கிறார்)

பார்த்தி: டேய் என்ன பாக்கறே?

வ.வே: ஒன்னுமில்லயா.. இதோ போய்கிட்டேயிருக்கேன்.. (அவசர, அவசரமாக ஓடுகிறார்)

(பார்த்திபன் ஒரு விஷம புன்னகையுடன் சைக்கிளை திருப்பிக்கொண்டு வந்த வழியே திரும்புகிறார்)

முடிவு

என்னங்க எங்கயோ படிச்ச மாதிரி இருக்கா.. இது ஒரு மீள் பதிவு.. பின்ன என்னங்க தெனக்கும் புதுசு, புதுசாவா எழுத முடியும்.. நாளைக்கிருக்கு.. புதுசா.. கடைசி நாள் பாருங்க..

4 comments:

Anonymous said...

பட்டையக் கிளப்பியிருக்கீங்க...
தேசிபண்டிட்-ல் இணைத்துள்ளேன். நன்றி

http://www.desipundit.com/2007/02/27/parhibanvadivelu/

இராம்/Raam said...

சூப்பர் சார்.... நிறைய இடத்திலே கொல்'ன்னு சிரிச்சிட்டேன்... :)

TBR. JOSPEH said...

வாங்க டுபுக்கு,

நன்றி..

TBR. JOSPEH said...

வாங்க இராம்,

நிறைய இடத்திலே கொல்'ன்னு சிரிச்சிட்டேன்... //

அப்ப உண்மையிலயே சிரிப்பு வருதுங்கறீங்க.. சந்தோஷம்..