Wednesday, November 15, 2006

இடம் கிடைத்துவிட்டது

"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

பாரதச்சிறுவன் ஒருவன்
சந்தோஷத்தில்
சப்தமிட்டுக் கொண்டிருக்கிறான்

Photobucket - Video and Image Hosting

இதைக்கேட்டு
விண்ணிலிருந்து
விரைந்து வந்த நேரு - ஒரு
ரோஜாவைப் பரிசளித்துவிட்டு
மெலிந்துபோன புறாவோடு
மீண்டும் மேலோகம் சென்றார்


"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

- சிறுவன் தொடர்ந்தான்

இவனுடைய
சப்தம் கேட்டதால்
சிலிர்ந்துக் கொண்டெழுந்தான் பாரதி!
"காலை எழுந்ததும் படிப்பு
கனிவு தரும் நல்ல பாட்டு "

கவிதையை
மீண்டுமொருமுறை
அச்சேற்றிவிட்டு அடங்கிப்போனான்

"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

- சிறுவன் தொடர்ந்தான்

காந்தி அவசரமாய்
கண்விழித்து
"இந்தியனை
இந்தியனிடமிருந்து காப்பாற்ற
நன்றாகப் படி"
என
வாழ்த்திவிட்டு - யாரும்
கட்சி ஆரம்பிப்பதற்குள்
கரைந்தோடிப்போனார்

"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

- சிறுவன் தொடர்ந்தான்

அன்னை தெரசாவின் தூக்கமும்
அவசரமாய்க் கலைக்கப்பட்டது

அவனை அருகிலழைத்து
ஆசீர்வதித்துவிட்டு
அரசியல்வாதிகள் வரக்கூடுமோ என்ற
அச்சத்தில் மீண்டும் உறங்கிப்போனாள்.
"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

- சிறுவன் தொடர்ந்தான்

கன்னியாகுமரியில்
குளித்துக்கொண்டிருந்த திருவள்ளுவர்
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"

பழைய குறளைப்
புதுப்பித்துவிட்டு
பாறை மீதேறி
படுத்துக்கொண்டார்

அனைவரின் ஆசீர்வாதமும்
சிறுவனை உற்சாகப்படுத்தியது
அப்படியே உறங்கிப்போனான்
மறுநாள் சீக்கிரம்
போகவேண்டுமல்லவா..?

ஆனால் அவனுடைய
விதவைத்தாய் மட்டும்
விடிய விடிய
அழுதுகொண்டிருந்தாள்

காதல் தோல்வியடைந்த
கம்ப்யூட்டர் இளைஞனொருவன்
தனக்குத் தூக்கம் வராததால்
கோபப்பட்டு
இரவை இழுத்துக்கொண்டு
எங்கோ ஓடிவிட்டான்?

ஆகவே
சீக்கிரமாய் விடிந்தது

விடிவதற்குள்
விழித்துக்கொண்டான் சிறுவன்
கசங்கிப்போன சட்டை உடுக்க...
கட்டுச்சாதம் கையில் எடுக்க...
விதவைத்தாய் முத்தம் கொடுக்க...
"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது
தீப்பெட்டித் தொழிற்சாலையில்
இடம் கிடைத்துவிட்டது"

சிறுவன் சப்தமிட்டுக்கொண்டே
சென்றுகொண்டிருக்கிறான்

எனக்கு மட்டும் கேட்கிறது
வாழ்த்திய தலைவர்களின்
விசும்பல் ஒலி


- ரசிகவ் ஞானியார்

6 comments:

ILA (a) இளா said...

//இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது
தீப்பெட்டித் தொழிற்சாலையில்
இடம் கிடைத்துவிட்டது"//

வாக்குறுதிகளுக்கும் வாழ்வுக்கும் நிறைய இடைவெளி இன்னும் இருக்குங்க ரசிகவ். அதைச் சுட்டி காட்டியவிதம் அருமை. கனவுகளும், கறபனைகளும் சோறு போடுறது இல்லீங்களே

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ILA(a)இளா said...
வாக்குறுதிகளுக்கும் வாழ்வுக்கும் நிறைய இடைவெளி இன்னும் இருக்குங்க ரசிகவ். அதைச் சுட்டி காட்டியவிதம் அருமை.//


நன்றி இளா...

தாரிணி said...

/"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது
தீப்பெட்டித் தொழிற்சாலையில்
இடம் கிடைத்துவிட்டது"
சிறுவன் சப்தமிட்டுக்கொண்டே
சென்றுகொண்டிருக்கிறான்/
மனம் கனக்கிறது. எடுத்துக்காட்டிய விதம் அருமை.

Divya said...

நெஞ்சை நெகிழ வைத்தது உங்கள் பதிவு!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
தாரிணி said...
மனம் கனக்கிறது. எடுத்துக்காட்டிய விதம் அருமை. //

//Divya said...
நெஞ்சை நெகிழ வைத்தது உங்கள் பதிவு! //

நன்றி தாரிணி மற்றும் திவ்யா..

நளாயினி said...

சிரிச்சிட்டாங்க எண்ட சொல்லாதேங்கொ. அழுதிட்டாங்க எண்ட சொல்லுங்கோ. நல்ல சமூக அக்கறை கவிதை. இந்த வலியை யாருமே இப்பிடி சொன்னதில்லை. மனசு வலிக்கிறது.