Sunday, June 4, 2006

இந்தப் பதில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

1. உங்கள் பதிவு ப்ரொபைலில் இருக்கும் அந்தப் பொன் குவியலை நீங்கள் எப்படி சம்பாதித்தீர்கள்? சங்கத்தில் களவாடிய நிதியா? இல்லை சங்கம் பெயரைச் சொல்லி நீங்கள் ஊழல் செய்த நிதியா?
சங்கத்துக்காகவே உழைத்து உழைத்து உணவு சமைக்கக் கூட நேரம் இல்லாமல் காய்ந்து போன பர்கரையும் உப்பு சப்பில்லாத பிஸ்ஸாவையும் சாப்பிட முடியாமல் முழுங்கும் என்னைப் பார்த்து, களவாடிய நிதியா, ஊழல் செய்த சதியா என்னும் கேள்வியைக் கேட்டது யார்?!!! யார்?!!!
யார் கேட்ட போதும் கேள்வி என்று ஒன்று வந்து விட்ட காரணத்தால், சட்டத்துக்கும் நீதிக்கும் கட்டுப்பட்ட என்னுடைய பதில் இதோ: அட்சய திருதீயை அன்னிக்கு எல்லார் வீட்டுக்கும் போய் வந்துகிட்டு இருந்தேனா, எல்லார் வூட்லயும் கொஞ்சம் தங்கம் வாங்கி வச்சிருந்தாங்க.. அங்கங்க ஒரு காசு எடுத்ததுல இம்புட்டு சேர்ந்து போச்சு. (சங்கத்துல அப்படியே நிதி இருந்துட்டாலும்!! ம்கும்)

2. பலப் பதிவுகளிலும் உங்களை சின்னப் பெண் எனக் கூறும் நீங்கள்.. உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சகப் பதிவாளர்களை மிரட்டி உங்களை அக்கா எனக் கூறுமாறு தொடர்ந்து பயமுறுத்துகிறீர்களாமே? இது சரியா?
இது சதி.. உங்களை யாருய்யா கூப்டச் சொன்னாங்க?!! ரொம்ப தான். நான் சொன்னேனா?, நான் சொன்னேனான்னு கேக்குறேன்.. கைப்புவை அண்ணான்னு சொன்னேன்.. அவரு தங்கச்சின்னு சொல்லிட்டாரு.. கார்த்திக்கை பாசமலர்னு சொன்னேன்.. அவரு அக்கான்னு சொல்றாரு!! நானா கூப்பிடச் சொன்னேன்?!!! ம்ஹும்..
தம்பி தேவு.. அக்காவுக்கு ஒரு சோடா எடுத்தா.. தொண்டைத் தண்ணி தீர்ந்து போகுது கத்திக் கத்தி... !!!

3. தேர்தல் நேரத்தில் சங்கத்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக எங்குமே பிரச்சாரம் போக மறுத்து விட்டு... இப்போது மட்டும் அயல் நாட்டு சங்க வளர்ச்சி திட்டம் என்று புதிய திட்டம் வகுத்து அயல் நாடு சென்று டாலர் தேத்துவது நியாயமா?
ஐயகோ.. என்னைப் பார்த்து என்ன ஒரு கேள்வி.. இதைக் கேட்க யாருமே இல்லையா?? புதிய பூமியே.. பழைய வானமே.. உனக்குமா தெரியவில்லை என் அருமை!!!!
சரி.. நான் வந்தேன்!! அதை விடுங்க.. நான் இங்க வந்ததும், சங்கத்துல எத்தனை அயல் நாட்டுக்காரங்க புதுசா சேர்ந்திருக்காங்க தெரியுமா?!! மகேஸ், சுகா, மனதின் ஓசை இவங்க எல்லாம் புது வரவு.. இங்க நான் வந்த நேரம் தான் இவங்க எல்லாம் நம்ம சங்கத்துல சேர்ந்திருக்காங்க.. ஏன், சூடான் சிவா கூடத் தான்..
கணக்கு கேட்கும் சங்கத் தலைமையே..
இந்தக் கணக்கையும் பார்!!!
கண்களைத் திறந்து பார்..
கண்ணாடியைத் துடைத்துப் போட்டுப்பார்!!!
இன்னோரு முறை கேட்டுப் பார்!!

4. புதரகத்தில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் அரிசி சோறு வடிப்பான் கருவி ஊழல் உண்மையா? தேவையின்றி சோறு வடிக்கும் சிறுப் பிரச்சனையைப் பெரிதாக்கி சங்கத்தாரின் பொன்னான நேரத்தை வீணானச் சோற்றுப் புராணப் பதிவுகளில் ஈடுபட வைப்பது மாபெரும் துரோகம் ஆகாதா?
என்னைய்யா துரோகம், பொல்லாத துரோகம், என்னைக் கேட்டுகிட்டா தல புட்பால் ஆடப் போனாரு?!! புட்பால் ஆடத் தல போறாருன்னு சொன்னீங்க.. அதான் புட் பத்தின பதிவா போட்டேன்!!!.. அதான்யா, food - உணவு.. அது பத்தின பதிவா போட்டு கிட்டு இருக்கேன்.. "சக்கரை இல்லாமல் காபி போடுவது எப்படி ?" அடுத்த பதிவு, பால் பத்தி.. காத்திருங்கள்!!

5. சங்கத்தில் உங்களுக்கு பிகுலு பட்டத்துடன் வழங்கிய பிகுலைத் தலக்கு எதிராகவே பயன்படுத்துவது.. அதாவது தல உதை பந்து விளையாடும் இடங்களில் ஒருவனைக் கூடவே தலப் பின்னால் ஓட விட்டு தலக் கைப்பு பந்து எடுக்கும் போதெல்லாம் அவன் பிகுல் அடிப்பதைப் பார்த்து மகிழ்வது.. இது குற்றமல்லவா?
என்ன இது?!! சிறுபிள்ளைத்தனமால்ல இருக்கு?!! பந்தை எசகுபெசகா எடுத்து, தலக்கு அடிகிடி பட்ருச்சுன்னா, பாதுகாப்பா இருக்கட்டுமேன்னு பின்னாடியே ஒருத்தனை ஓட விடறேன்.. சரியாப் பாருங்கைய்யா.. அது வேற யாரோ இல்லை.. நானே தான். நானே தான் தலைக்கு பாதுகாப்பு வளையமா பிகிலோட கூட ஓடிகிட்டு இருக்கேன்.. என்னோட தியாகத்தை மெச்சாம, இப்படி போட்டு மொத்துறீங்களே?!! பசங்க எல்லாம் சேர்ந்துகிட்டு!!!

6. கைப்பொண்ணுவை வா.வ.சவில் ( சரியாகப் பார்க்கவும் வரு.வா.ச அல்ல) வா.வ.ச... இணையச் சொல்லி மிரட்டியது.. கைப்பொண்ணுக்கு மீசை முளைக்க வைத்தது.. அதற்கு விளக்கெண்ணெய் தடவியது எனக் கொடுமைகள் இழைத்தது சரியா?
இது ஆதாரம் இல்லாத குற்றச் சாட்டு.. அவதூறு பரப்பும் வேலை.. நெக்ஸ்ட்!!!

7.சங்கத்துக்கு மிகவும் நெருக்கமானப் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் வாக்குறுதிகளின் வங்கி இலவசக் கொத்தனார் மீது சங்கத்திலிருந்து தட்டு முட்டுச் சாமான்களை லவட்டிச் சென்றதாய் குற்றம் சாட்டி மிரட்டியது.. இப்போது சாதம் வடிப்பது போன்ற சுமாரான சமையல் குறிப்புக்களைக் கொடுத்துவிட்டு பரோட்டாப் போடுவது எப்படி என்ற மாபெரும் சாதனைப் பதிவுப் போட்டு மீன்கொத்தி அன்பர்களின் அமோக ஆதரவு பெற்று அமைச்சரான கொத்தனாரின் உணவுத் துறை இலாகாவைக் கைப்பற்ற நீங்கள் சதி செய்கிறீர்களாமே?
கொத்தனாரின் உணவுத் துறை ஒரு காய்ந்து போன பரோட்டா! ஊசிப் போன சால்னா! அதை ஒருத்தர் கைப்பற்ற வேற பற்றணுமா??!! நம்ம எங்கயோ அடுத்த கிரகத்துல சாதம் வடிக்கிறதப் பத்தி ஹைடெக்கா யோசிச்சிகிட்டு இருக்கோம்.. அவரு இப்போ தான் தரமா வெண்பா எப்படி வடிக்கிறதுன்னு பதிவு போடறாரு பதிவு.. அதுக்கு ஒரு சதி வேறயா?!! நம்ம காரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்களே!!

8.வெண்பாவைக் கட்டாயக் கல்வியாக்கி வருத்தப் படாத வாலிபர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சியது மிகப் பெரியக் குற்றம் அல்லவா?
இந்தக் கேள்விக்கு கொத்தனாரும் ஜீவாவும் பதில் சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.. என்னைப் போன்ற அறியாச் சிறுபெண் இதற்கெல்லாம் என்ன கூறுவது??!!

9.கீதா அக்காவின் ஆறு லட்சம் ரசிகர் மன்றங்களைக் கலைத்தது... இன்னும் அவருக்கென் இருக்கும் சில நூறு மன்றங்களையும் பின்னூட்டமிட்டு கலவரப் பூமியாக மாற்றுவது என பெரும் சதி திட்டம் தீட்டி வருகிறீர்களாமே?
ஆறு லட்சம் ரசிகர் மன்றம் எந்த ஊர்லங்க இருந்துச்சு?!! ஆறு பேர் கூட இல்லை அந்த ரசிகர் மன்றத்துல.. அவங்க கூட "என்னை இங்கேர்ந்து விடுவி.. காப்பாத்து!!"ன்னு கெஞ்சிகிட்டு இருந்தானுங்க!! நான் தான் போய் அவங்களை எல்லாம் விடுதலை செஞ்சி கூட்டியாந்தேன். இதோ இப்போ சங்கத்து சார்பா மன நல மருத்துவமனைல சேர்த்துட்டு வந்தோமே, அந்த ஆறு பேர்தான்!!

10. எல்லாவற்றுக்கு மேலாக உங்கள் மீது கூறப் படும் குற்றச்சாட்டு சங்கத்தின் உயர்வான...உயிரான... கொள்கையான வருத்தப் படாமல் இருப்பதை மீறியது.. உங்கள்த் தனி பதிவில் மட்டுமின்றி பிற பதிவுகளிலும் சென்று 'வருத்தப்படுவதாய்' பிரகடனம் செயதிருப்பது உங்கள் இயக்கத்திற்கு இழைக்கும் கொடுந்துரோகம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
வருத்தப்பட்டதாகச் சொன்னேன்.. ஏன் சொன்னேன்?!! எதற்குச் சொன்னேன்? நமது எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்னும் தெளிவு பிறக்க வேண்டுமென்று சொல்லப்பட்ட மதியூகமான வார்த்தைகள் அவை.
உங்களுக்கு இது புரியாமல் போனது வருத்தமில்லை என்ற போதும், கேள்வி கேட்டு இதைக் கொச்சைப் படுத்திய போது தான் மனம் ரணமாகிறது!!!

தங்கத் தம்பிகளே! ரத்தத்தின் ரத்தங்களே!! அன்பு உடன்பிறப்புகளே!!!
ஒரே கொடியில் நாம் அனைவரும் பூத்திருந்தால், கொடி தாங்காமல் உடைந்து விடக் கூடும் என்பதால், வெவ்வேறு கொடியில் பூத்த உடன்பிறவா சகோதர சகோதரர்களே!!!
நீங்கள் என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா?!! சங்கத்திற்காக வீக் என்டைக் கூட விலக்கி வைத்து விட்டு வியர்வை வழிய வேலை செய்து கொண்டிருக்கும் என்னை,
வெண்பா பாடவா என்று கூறி கொத்ஸும், வெ.வா. ஜீவாவும் அழைத்துக் கொண்டிருந்த போதும் சங்கத்தின் வெண்பலகையில் என் பெயர் கறுப்பு மையால் எழுதப்படக் கூடாது என்று எண்ணி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும்,
நமது சங்கம் புட்பாலுக்குப் பின் பேஸ்பாலுக்கும், பாக்கெட் பாலுக்கும், ஆவின் பாலுக்கும் ஆடி அடுத்தடுத்துச், சங்கத்தைச் சிறப்பாக்க என்ன செய்யலாம் என்பது தான் நான் அல்லும் பகலும் அனவரதமும் எண்ணிக் கொண்டிருப்பது என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விழைகிறேன் (அட, இளவஞ்சி வாத்தியாரை விட நீ...ளமான வாக்கியம் ;))

இப்படிப் பட்ட என்னை நோக்கி, பத்து கேள்விகளை வீசியதல்லாது, அவற்றைப் பதில் சொல்லச் சொல்லி நாளொரு பின்னூட்டமும் பொழுதொரு குற்றச்சாட்டும் வைத்து இந்த ஒரு வாரமாக என்னை மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாக்கி விட்டீர்கள்!!

=> இதில் சங்கத்துக்குச் சம்பந்தமில்லாத கட்டதுரையும் பார்த்திபனும் என்னைக் கெக்கலிகொட்டிச் சிரித்த போது அதைக் கண்டிக்க வேண்டிய தலைவர் எதுவுமே சொல்லாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது ஏன்?!!
=> ஒரு கொடியில் பூத்த இரு மலர் என்று அவ்வப்போது சொல்லிக் கொள்ளும் பேராசிரியர் கமிட்மென்ட்ஸ் கார்த்திக் இந்த விவகாரத்தில் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போன்று மௌனம் காத்தது ஏன்?!!
=> கேள்விகளின் ஆழம் புரிந்தும், அதனால் கேள்விக்குள்ளாக்கப் படும் எனது கட்டுரிமை புரிந்தும் கேள்விகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல், பேரிச்சம் பழங்களைப் பற்றியே பேசி இந்தக் கொடுமையைத் தளபதி சிபி கண்டிக்காமல் விட்டது ஏன்?
=> இந்த நிகழ்வைக் கண்டித்து "தீக் குளிக்கிறேன்!! தீக் குளிக்கிறேன்!!" என்று கொதிப்பதாகச் சொல்லிய ஜொள்ளு பாண்டி, ஒரு டீக் கூட குடிக்காதது ஏன்?
=> மற்ற தம்பிகள் எல்லாம் இது மாதிரி குற்றச்சாட்டுகளுக்கு ஆளான போது, ஓடோடி வந்து கைக் கொடுத்த தலைவலி கீதா இப்போது இந்தப் பிரச்சனையில் ஒன்றுமே சொல்லாதது ஏன்?

இத்தனை கேள்விகள் இப்போது எழுகின்றன.. கைப்பொண்ணு காணாமல் போனதற்கும் இப்போது சங்கத்துக்காக, ஒட்டகம் போல் உழைத்த என்னை(நாய், கழுதைன்னு எத்தனை நாள் சொல்றது?!!) ஓரம் கட்ட முயல்வது.. இவை எல்லாம் எதற்காக?!!

* மகளிர் அணியை ஒரே நபர் கட்டி ஆள வேண்டும் என்னும் பேராசையால் எழுந்த பொறாமைக் கடிதமா?
* வட அமெரிக்காவில் கொள்கை பரப்ப நான் வந்து விட்டேன் என்று அஞ்சி தோசை சுடும் பேராசிரியரின் பெரிய சதியா?
* தளபதி தலை மறைவாய் இருந்த போது தலையெடுத்து பொறுப்புடன் கட்சியைப் பார்த்துக் கொண்டேனே, அதற்கு அவர் செய்யும் கைம்மாறா?
* கழகப் போர்வாள், தலயின் கை என்று சொல்லப்படுபவர் எங்கே கைக்கு போட்டியாக, தலயின் மூளையாக நான் வந்துவிடுவேன் என்று எண்ணிக் கிளப்பிய பழியா?

இத்தனை கேள்வியும் எழுந்தாலும், எதுவும் நான் கேட்கும் கேள்வி அல்ல!! இதைக் கேட்பது எனக்காக உயிரையும் தரத் தயாராய் இருக்கும் என் அருமைத் தொண்டர்கள்..
அவர்களுக்கு நியாயமான பதில் சொல்லக் கட்சித் தலைமை கடமைப்பட்டுள்ளது.. சீக்கிரத்தில் இதற்கொரு பதில் தெரியவில்லையெனில், சோழங்க நல்லூர் சந்திப்பில் அஜன்டாவில் இல்லாமல் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வெளிவிட வேண்டியதாகிவிடும்!!!

33 comments:

துபாய் ராஜா said...

பொன்சக்கோ!கேள்வி கேட்டது யாரோ!
ஆனா நீங்க நம்ம ச்ங்கத்துபங்காளிங்க மேலேய பதில் கேள்வி கேட்டு பாஞ்சிருக்கீங்க????!!!!!!!!!.

'நாட்டாமை' விஜயகுமார் பாணியில் சொன்னால்,
ம்ஹூம்!இது செல்லாது!செல்லாது!.

(துபாய்)ராஜா.

G.Ragavan said...

ஆகா! ஒங்கள இவ்வளவு கேள்வி கேக்குறாங்களே...நல்லவேள...நம்ம சந்திப்புல நடந்ததெல்லாம் பேசுனதெல்லாம் ஒங்களுக்கு மறந்து போச்சுன்னு சொல்லீட்டீங்க. அத அப்பிடியே கண்டின்யூ பண்ணுங்க. (அப்புறம் பமக சார்புல ஒங்களுக்கு அன்பளிப்பாக் குடுத்த பொன்-பலாப்பழம் பத்திரமா இருக்குல்ல. ஏன்னா...உள்ள ஒவ்வொரு தங்கச்சொளைக்குள்ளையும் வைரக்கொட்டை வெச்சிருக்கோம். பிளாட்டினம் கத்தி வெச்சிக்கிட்டு கையில தங்கபஸ்பம் தேச்சிக்கிட்டு வெட்டுங்க. சரியா? இத இங்க சொல்லீருக்க மாட்டேன். தெரியாம விட்டுறப் போறீங்களோன்னு சொன்னேன்.)

துபாய் ராஜா said...

//இது ஆதாரம் இல்லாத குற்றச் சாட்டு.. அவதூறு பரப்பும் வேலை.//

நல்லவேளை! அயல்நாட்டு ஆப்பு, வெளிநாட்டு சதி...ன்னு சொல்லி
எங்களையெல்லாம் இழுக்காம விட்டீங்களே!!!.

(துபாய்)ராஜா.

பொன்ஸ்~~Poorna said...

//ஆனா நீங்க நம்ம ச்ங்கத்துபங்காளிங்க மேலேய பதில் கேள்வி கேட்டு பாஞ்சிருக்கீங்க????!!!!!!!!!.//
யாரோ கேட்ட கேள்வியா இருந்தாலும், பதில் சொல்லச் சொல்லி மிரட்டினது யார்னு பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியும்..

இது கூடப் புரியாத மாதிரி நடிக்கிறியா ராசா?!! யூ டூ துபாய் ராஜா??!!! யூ டூ!!!

யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!!!

பொன்ஸ்~~Poorna said...

//சந்திப்புல நடந்ததெல்லாம் பேசுனதெல்லாம் ஒங்களுக்கு மறந்து போச்சுன்னு சொல்லீட்டீங்க.//
ஜி.ரா.. இதெல்லாம் இங்ஙன பேசிகிட்டு.. எல்லாம் எங்க கம்பனி கேன்டீன்ல நான் வந்ததுக்கு அப்புறம் பேசுவோம்.. அப்டியே அந்தப் பதிவுல சில கேள்வி இருக்கு.. பதில் சொல்லிடுங்க!!

நன்மனம் said...

சங்க தீர்மானப்படி ஒரு இடம் தவிர எங்கேயும் சிரிப்பான் இல்லாமல் பார்த்துக்கொண்ட பொன்ஸ்கு நன்றி.:-))

பொன்ஸ்~~Poorna said...

//நல்லவேளை! அயல்நாட்டு ஆப்பு, வெளிநாட்டு சதி...ன்னு சொல்லி
எங்களையெல்லாம் இழுக்காம விட்டீங்களே!!!.
//
இப்போது அந்தச் சந்தேகம் எனக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.. பார்க்கலாம்.. சூடான் சிவாவின் கருத்தை அறிந்து கொண்டு என் பேன்ஸ் ஒரு முடிவுக்கு வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்!!

பொன்ஸ்~~Poorna said...

//சங்க தீர்மானப்படி ஒரு இடம் தவிர எங்கேயும் சிரிப்பான் இல்லாமல் பார்த்துக்கொண்ட பொன்ஸ்கு நன்றி.:-)) //
நன்மனம், அது கூட சிரிப்பான் இல்லை.. கண்ணடிப்பான்.. பாருங்க.. நான் எத்தனை சங்கத்துக்கு உண்மையாளியாய் இருக்கேன்னு.. யாருமே இதைப் பாராட்ட மாட்டேங்கறாங்க!!! இத்தனை கேள்வி வேற!!

நன்மனம் said...

//..என் பேன்ஸ் ஒரு முடிவுக்கு வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்!! //

யார் யார் தலைக்கு போகலான்னா:-))

ஏஜண்ட் NJ said...

இதைப் பற்றி எமது ஏஜண்ட் "டவுட் இப்ராகீம்" அனுப்பிய ரகசியச் செய்தியின் யுனிகோட் தமிழ் வடிவம் கீழே:

முதல் கட்ட தோராயமான ஆய்வுகளின் படி இதையெல்லாம் யாரோ கோரா போரா குகைகளிலிருந்து எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். விரைவில் பல திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள் நிகழ சாத்தியங்கள் தென்படுகின்றன. அபாயநிலை அறிவிப்பின் கொடி "வெள்ளை" நிறத்தில் பறக்க விடுவது சமயோஜிதம்!.

பொன்ஸ்~~Poorna said...

//யார் யார் தலைக்கு போகலான்னா:-)) //
அட, வேற யாரைத் தலைவரா ஏத்துக்கிடலாம்னு தான்!!!
நன்மனம், உங்களுக்குத் தெரியாததில்லை.. ராகவன் ப.ம.கவுக்கு வரச் சொல்றாரு.. ஆனா அவரோட மயில், தனிக் கட்சி ஆரம்பிக்கலாம்னு சொல்லுது.. பார்க்கலாம்.. ஜான்ஸி ராணி கவிதா வேற வா.வ.சங்கத்துக்குக் கூப்பிட்டுகிட்டு இருக்காங்க.. யார் யார் தலைக்குப் போகணும்னு முடிவு பண்ணணும்.. எது வசதின்னு பார்க்கணும்..

பொன்ஸ்~~Poorna said...

//முதல் கட்ட தோராயமான ஆய்வுகளின் படி இதையெல்லாம் யாரோ கோரா போரா குகைகளிலிருந்து எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். விரைவில் பல திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள் நிகழ சாத்தியங்கள் தென்படுகின்றன. அபாயநிலை அறிவிப்பின் கொடி "வெள்ளை" நிறத்தில் பறக்க விடுவது சமயோஜிதம்!. //

சுத்தம்.. யூனிகோடு, யானைக் கோடுன்னு எதுவா இருந்தாலும் நமக்குப் புரியப்போவதில்லை..

இப்போ எல்லாம் நான் உங்க பதிவு என்ன, பின்னூட்டங்களையே படிக்கிறதோட சரி.. புரிஞ்சிக்க முயற்சிகூட செய்யறது இல்லை.. எங்க தலைக்கே புரியாம இல்ல எழுதறீங்க?!!! வரட்டும்.. கொங்கு ராசா வந்தா கொஞ்சம் புரியலாம் :)

Iyappan Krishnan said...

யக்கோவ்... யாருக்கா உங்களைக் கேள்வி கேட்டது.. மன்ஸு தாங்கலக்கா...

நான் வேண்ணா ரெண்டு டீக்குடிச்சிடவா.. மன்ஸு தாங்கலக்கா .. தாங்கல..

மக்கா ரெண்டு மசாலா டீ பார்சேல்...


டீக்குடிக்கப் பொகும்

ஜீவா

பி.கு : பமக சங்கத்தோட நிதியை தெரியாம எடுத்து வந்து கொடுத்தாரே பொருளாளர்.. இன்னும் முடுவு மாத்திக்கலையா ?? வ.வா.ச விலேயே இருக்கப் போறீங்களாக்கா ??

( யாரோ பத்த வச்சிட்டியே பரட்டைன்னு சவுண்டு உடற மாதிரி சத்தம் கேக்குதே ?? )

துளசி கோபால் said...

பொன்ஸ்,

இப்படியெல்லாம் 'குண்டக்க மண்டக்க'ன்னு கேள்வி பதில் சொல்லிக்கிட்டு இருந்தா
உருப்பட்டாப்புலேதான்.

இருக்கற மூணொ, நாலோ மாசத்துலே நேரம் கிடைக்கிறப்பல்லாம் ஊர் உலகத்தைச் சுத்திப் பார்த்தமா,
பதிவு எழுதத் தோதா நாலு விசயத்தைச் சேகரிச்சோமான்னு இருக்கத்தாவலை?

போனா வராது பொழுதுபோனாக் கிடைக்காது இதெல்லாம். இன்னொருக்கா புதரகம்
போனாலும் இந்த இடம் இல்லாம வேற எடமாத்தான் இருக்கும்.

அக்கா சொல்றதைச் சொல்லிப்போட்டேன். உஷாரா இருந்துக்கிட்டா நல்லது, ஆமா.

Unknown said...

ஆற்றலரசியை நோக்கி கைநீட்டி கேள்வி கேட்பவரை பெடல் எடுக்க கொள்கைவீரர்கள் தயாராக உள்ளனர்.பச்சோந்தி கட்சியினரிடம் விலைபோய் விட்டவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு என் தமிழ் தாயே நீ பதிலளிக்காதே,கழகம் பதிலளிக்கும்,காலம் பதிலளிக்கும் என்பதை கூட்டணி தலைவர் அடலேறு கைப்புவின் ஆணையின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்

Unknown said...

ஆற்றலரசியை நோக்கி கைநீட்டி கேள்வி கேட்பவரை பெடல் எடுக்க கொள்கைவீரர்கள் தயாராக உள்ளனர்.பச்சோந்தி கட்சியினரிடம் விலைபோய் விட்டவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு என் தமிழ் தாயே நீ பதிலளிக்காதே,கழகம் பதிலளிக்கும்,காலம் பதிலளிக்கும் என்பதை கூட்டணி தலைவர் அடலேறு கைப்புவின் ஆணையின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்

அருள் குமார் said...

எது எப்படியோ... //சங்கத்திற்காக வீக் என்டைக் கூட விலக்கி வைத்து விட்டு வியர்வை வழிய வேலை செய்து கொண்டிருக்கும் என்னை,
// இது சத்தியமான வார்த்தைங்க :)

துபாய் ராஜா said...

//இது கூடப் புரியாத மாதிரி நடிக்கிறியா ராசா?!! யூ டூ துபாய் ராஜா??!!! யூ டூ!!!//

பொன்சு!சங்கத்துல நீங்களும்,நானும் மட்டும்னா டூ டூ ன்னு நம்ம ரெண்டு
'டூ'க்குள்ளே பேசி முடிச்சுக்கலாம்.
ஆனா தினம் தினம் நம்ம சங்கத்துல சேர்ற ஹண்ரடூ,ஹண்ரடூ,தவுசண்டூ,
தவுசண்டூ மெம்பர்சுக்கும் சரியான
பதில் சொல்லித்தானமா ஆகணும்!!!.

(துபாய்)ராஜா.

நாகை சிவா said...

//எத்தனை அயல் நாட்டுக்காரங்க புதுசா சேர்ந்திருக்காங்க தெரியுமா?!!//

அயல்நாட்டவர்கள் இல்லங்க. அயல்நாட்டில் சங்க பணி ஆற்றி கொண்டு இருக்கும் சங்கத்தின் இந்திய சிங்கங்கள்.

நாகை சிவா said...

//இப்போது அந்தச் சந்தேகம் எனக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.. பார்க்கலாம்.. சூடான் சிவாவின் கருத்தை அறிந்து கொண்டு என் பேன்ஸ் ஒரு முடிவுக்கு வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்!! //
பொன்ஸ், இது கொஞ்சம் கூட நல்லா இல்லங்க. உங்கள் மீது குற்றபத்திரிக்கை வாசித்த போது அதை எதிர்த்து அறிக்கைவிட்டது நீங்க பார்க்கவில்லையா. நீங்க சொன்ன மாதிரி ஆப்பாயில் சாப்பிட்டு அமைதி அடையாமல், அரை ஆம்லெட் சாப்பிட்டு அமைதி அடைந்தது தவறு தான். அதற்காக, இப்படி ஒரு அபாண்ட குற்றசாட்டு என் மீது சுமர்த்தலாமா?

துபாய் ராஜா said...

//(அப்புறம் பமக சார்புல ஒங்களுக்கு அன்பளிப்பாக் குடுத்த பொன்-பலாப்பழம் பத்திரமா இருக்குல்ல. ஏன்னா...உள்ள ஒவ்வொரு தங்கச்சொளைக்குள்ளையும் வைரக்கொட்டை வெச்சிருக்கோம். பிளாட்டினம் கத்தி வெச்சிக்கிட்டு கையில தங்கபஸ்பம் தேச்சிக்கிட்டு வெட்டுங்க. சரியா? இத இங்க சொல்லீருக்க மாட்டேன். தெரியாம விட்டுறப் போறீங்களோன்னு சொன்னேன்.)//

பொன்சு!எல்லா பின்னூட்டத்துக்கும் பதில் சொன்ன பொன்சு இதுக்கு மட்டும் ஏன் இதுவரை பதில் சொல்லலைனு எதிரிகள் எங்களை ஏளனமா கேக்கிற மாதிரி வச்சுறாதீங்க!!.

(துபாய்)ராஜா.

நாகை சிவா said...

//ராகவன் ப.ம.கவுக்கு வரச் சொல்றாரு.. ஆனா அவரோட மயில், தனிக் கட்சி ஆரம்பிக்கலாம்னு சொல்லுது.. பார்க்கலாம்.. ஜான்ஸி ராணி கவிதா வேற வா.வ.சங்கத்துக்குக் கூப்பிட்டுகிட்டு இருக்காங்க.//

என்ன அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் கூப்பிடாக, லண்டனில் டோனி பிளேயர் கூப்பிடாக, ரஷ்யாவில் புடின் கூப்பிடாக அவ்வளவு ஏன் நம்ம மன்மோகன் சிங் கூட கூப்பிடார்.
அது எல்லாம் விட்டுபுட்டு என் கிரகம் இங்க வந்து மாட்டிகிட்டேன்.

மக்களே! நான் ஏதும் கூற விரும்பவில்லை. உங்கள் பார்வைக்கு விட்டு விடுகின்றேன். நீங்களா பார்த்து ஏதாச்சும் சொல்லுங்க. அதை நான் வாயை மூடிக்கிட்டு கேட்டுக்குறேன்.

இலவசக்கொத்தனார் said...

//வெண்பா பாடவா என்று கூறி கொத்ஸும், வெ.வா. ஜீவாவும் அழைத்துக் கொண்டிருந்த போதும் //

வெண்பா எழுத டச் விட்டுப் போச்சு என என்னிடம் அறிக்கை. அதன் பின் இந்தப் பதிவு. தெரியவில்லையா நண்பர்களே. வேறொன்றும் செய்ய இயலவில்லை. எனவே களப்பணி. இதில் இவ்வளவு தற்பெருமை வேறு.

இலவசக்கொத்தனார் said...

//அக்கா சொல்றதைச் சொல்லிப்போட்டேன். உஷாரா இருந்துக்கிட்டா நல்லது, ஆமா. //

டீச்சர், நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் டீச்சர். கேட்க மாட்டேங்கறாங்க. அது மட்டுமில்லை. உங்களை மாதிரி எழுத ஆசைப்பட்டு நான் கால்கரி பயணத்தை மூணு பதிவா போட்டா வந்து ஏளனம் பண்ணறாங்க. எல்லாம் இந்த வீணாப் போன சங்கத்தில் மாட்டிக் கொண்ட வேலை.

(அப்பாடா. போட்டுக் கொடுத்து பேர் வாங்கும் வேலையை சரியா பண்ணியாச்சு.)

மகேஸ் said...

சரி பொன்ஸ், புதரகத்தில் நம்ம கொத்தனாரிடம் சங்கத்தை அடகு வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வந்துள்ளன. அது குறித்து உங்களின் பதில்?

Santhosh said...

பொன்ஸ்,
இரவு பகல் பாராமல் சங்க வேலையை செய்ற உங்களை பாத்து இப்படி கேட்டுப்புடாங்களே. இதை எதிர்த்து நீங்க ஏன் யாரை யாவது தீக்குளிக்க வக்க கூடாது. எனக்கு என்னவோ கைப்பூதான் இதுக்கு சரியான ஆளுன்னு தோணுது(அப்படித்தான் நீங்க தலைவி ஆக முடியும்).

Geetha Sambasivam said...

சங்கத்தின் சிங்கங்களே, இப்போ புரியுதா? உண்மையான தலைவலி நாந்தான் என்று. இந்த பொன்ஸ் பாருங்க, அக்ஷய திரிதியை அன்னிக்குத் தேத்தினது போதாதுனு, ராகவன் கிட்ட பொன் பலாப்பழம், அதுவும் வைரக்கொட்டை வைச்சது, அப்படியே புதரகம் போயிடுச்சு. இந்தியாவின் சொத்துங்க அது, தலைவரே, செருமேனியில் என்ன தூங்கிக்கிட்டா இருக்கீங்க? கணக்கு, கணக்கு, கணக்குக் கேளுங்க. உண்மை வெளிவரும். சங்கத்தின் உண்மையான ரத்ததின் ரத்தம், உடன் பிறக்காதது எல்லாம் யாருனு தெரியும். சும்மா பிஸ்ஸா, பர்கர்னு அனுதாபம் கிளப்பப் பார்க்கறாங்க.

Anonymous said...

http://niyajudeen.blogspot.com/2006/04/comedy.html

SEE THIS COMEDY

Syam said...

வ.வா சங்கத்தில் இருந்து கொன்டு கேள்வி கேட்டதுக்கு எல்லாம் வருத்தபட கூடாது அப்டியே தல ஸ்டைல்ல தட்டி விட்டுட்டு போய்டே இருக்கனும், பொன்ஸ் அக்கா ஒன்னும் காமெடி கீமெடி பன்னலயே

VSK said...

சரியாச் சொன்னீங்க, து.கோபால்!

நானும் சொல்லி சொல்லி அலுத்துப் போயாச்சு!

கட்சிக்காக பாடுபட வேண்டியதுதான்!

அதுக்காக, இப்படியா?

என்னமோ போங்க!

மூணு மாசத்தை கணினி பக்கத்துலியே கழிச்சுருவாங்க போலிருக்கே!

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்,

//யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!!!//

விடுங்க ... விடுங்க பசங்க ஏதோ வீக் என்ட் போதைல தல கால் பிரியாம கணக்கு கேட்டுப்புட்டாங்க இதுக்கெல்லாம் பேதை நெஞ்சம் பேஸ்த் அடிச்சா போல பொலம்பலாம!

வவ்வால் said...

//வந்துட்டீங்களா வவ்வால், வாங்க வாங்க..

இன்னும் சில பதிவுகளிலும் சீரியஸான விவாதங்கள் ஓடிகிட்டு இருக்கு.. உங்க தலைகீழ் விகிதங்களை எல்லா இடத்திலயும் போட்டுத் தாக்க வாழ்த்துக்கள் :)
//

போன வாரம் முதலில் உங்க பதிவைத்தான் பார்த்தேன் போல இருக்கு ஒரு இடமா என்னை உட்கார விடாமா அலையவச்சுட்டிங்க!!?? அதான் நிறைய பதிவுகளை பார்க்க முடியவில்லை.இந்த வாரமாவது பொருமையா எல்லாம் படிச்சு பார்த்து போட்டுதாக்குறேன்.இ.கொ. வேற இரும்பு அல்ல கரும்புனு சொல்லிட்டார் இனிமே அடிக்கடி வந்து குட்டையை குழப்பவேண்டியது தான் :-))

Unknown said...

//ஒரே கொடியில் நாம் அனைவரும் பூத்திருந்தால், கொடி தாங்காமல் உடைந்து விடக் கூடும் என்பதால், வெவ்வேறு கொடியில் பூத்த உடன்பிறவா சகோதர சகோதரர்களே!!!//
அட அட.. இப்படியெல்லாம் சென்டிமென்டலா மென்டலாயிருக்கீங்க. நான் இப்பதான் படிக்கிறேன். சே.. ஆற்றலரசியின் சொல்வன்மையை இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

//போனா வராது பொழுதுபோனாக் கிடைக்காது இதெல்லாம். இன்னொருக்கா புதரகம்
போனாலும் இந்த இடம் இல்லாம வேற எடமாத்தான் இருக்கும்.//
நானும் இதையேத்தான் சொன்னேன் துளசிக்கா. ஆனா ஊர்தியே இல்லாம எப்படி ஊர் சுத்தறதுன்னு கேக்கறாங்க. சங்கத்தின் புதரகக்கிளையிலயே இருந்தும்கூட ஆற்றலரசிக்கு ஊர் சுத்திக்காட்டமுடியாத பாவியாயிட்டேன் நான். கலிமுத்தறதுக்குள்ள கலிபோர்னியா பக்கம் வந்தா ஊர் சுத்திக்காண்பிக்க ரெடியா இருக்கேன்.