Thursday, October 21, 2010

நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு...ஸ்ட்ரிக்ட்டு...ஸ்ட்ரிக்ட்டு...!

Justify Full’அக்கடா’ என்று உட்கார்ந்துகொண்டு நெடுந்தொடர் பார்த்துக் கொண்டிருந்த குப்புசாமி, அழைப்பு மணி சத்தம் கேட்டதும் எரிச்சலடைந்தார்.

"கோலம்மா! வாசல்லே யாருன்னு பாரு! யாராவது வேக்கூம் கிளீனர் கம்பனியிலேருந்து வந்திருந்தா நாம வீட்டையெல்லாம் சுத்தமே பண்ணுறதில்லேன்னு சொல்லி அனுப்பிடு!"

எரிச்சலோடு எழுந்துபோய் கதவைத் திறந்த கோலம்மாள், எதிரே 1950-ம் வருட மாடல் அம்பாசடர்கள் போல நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களைப் பார்த்து அதட்டினாள்.

"யாருங்க நீங்க?"

"நாங்க இன்கம் டாக்ஸ் ஆபீஸிலேருந்து வர்றோம்."

"அடுத்த வீடு பாருங்க! நாங்க எதுவும் போடறதில்லை!"

"மேடம்!" கண்ணாடி போட்டுக்கொண்டு சிவாஜியில் ஸ்ரேயாவைப் பார்க்க மாறுவேடத்தில் வந்த ரஜினி போலிருந்தவர் அதட்டினார். "நாங்க பிச்சை கேட்க வரலே! வருமானவரித்துறையிலேருந்து வந்திருக்கோம். உங்க வீட்டை செக் பண்ணனும்!"

"ஆமாம்! நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு....ஸ்ட்ரிக்ட்டு...ஸ்ட்ரிக்ட்டு..." என்றார் அசப்பில் விவேக் போலவே இருந்த இன்னொருவர்.

"என்னங்க, யாரோ வருமானவரி ஆபீஸ்லேருந்து வந்திருக்காங்களாம்!" என்று கணவருக்குக் குரல் கொடுத்தார் கோலம்மாள்.

"வருமான வரியா? நமக்குத் தான் வருமானமே கிடையாதே!" என்று எரிச்சலோடு எழுந்துவந்த குப்புசாமி, வாசலில் நிற்பவர்களை ஏற இறங்கப் பார்த்தார்.

"சார்! தப்பான வீட்டுக்கு வந்திருக்கீங்க! இது வாடகைவீடு! நான் ஒரு குமாஸ்தா! எனக்கு சொத்து பத்து எதுவும் கிடையாது. ஒரே ஒரு சொத்தைப்பல்லுதான் இருக்கு. அதைப் புடுங்குறதுக்குக் கூட காசில்லாம ஆபீஸ்லே அட்வான்ஸ் கேட்டிருக்கேன். பக்கத்துத் தெருவுக்குப் போனீங்கன்னா ஒரு வட்டச்செயலாளர், ஒரு சீட்டுக்கம்பனிக்காரரு, ஒரு ஜோசியர் இருப்பாங்க! அவங்க வூட்டுலே செக் பண்ணினீங்கன்னா நிறைய தேறும்."

"சரியான தகவல் கிடைச்சுத்தான் இங்கே வந்திருக்கோம்! வழிவிடுங்க!" என்று கூறியபடி இரண்டு அதிகாரிகளும் வீட்டுக்குள்ளே அதிரடியாய் நுழைந்தனர்.

"சார்! சார்! சொல்றதைக் கேளுங்க! அந்த சோபாவிலே உட்காராதீங்க! அது சோபா இல்லை! சோபா மாதிரி!"

வந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். தாங்கள் கொண்டுவந்திருந்த பையை டீப்பாயின் மீது வைக்க முயன்றனர்.

"சார்! சார்! அதுமேலே வைக்காதீங்க! அது டீப்பாயில்லை; டீப்பாய் மாதிரி!"

"என்னங்க?" கோலம்மாள் கலவரத்தோடு கேட்டாள். "தொறந்தவீட்டுக்குள்ளே எதுவோ மாதிரி நுழைஞ்சிருக்காங்க! பேசிட்டு சும்மாயிருக்கீங்களே...போலீஸுக்கு போன் பண்ணுங்க!"

"இந்த மேடம் யாரு மிஸ்டர் குப்புசாமி?"

"என் பொஞ்சாதி மாதிரி...அதாவது உண்மையாவே என் பொஞ்சாதிதான்! ஐயையோ! எனக்குப் பதட்டத்துலே வாயெல்லாம் குழறது சார்!"

"உங்களைத் தீவிரமா விசாரிக்கணும் மிஸ்டர் குப்புசாமி! உங்க பொண்ணு எங்கே??"

"அவ செல்போனிலே பேசிட்டிருக்கா! திரும்பி வர ஒரு வாரமாகும். அதுவரைக்கும் நாம பேசிட்டிருப்போமே!" என்று ஒரு ஜமுக்காளத்தை விரித்து வந்த அதிகாரிகளை உட்காரவைத்த குப்புசாமி, ’ஒரு நிமிசத்துலே வர்றேன்,’ என்று கூறி கோலம்மாளை அழைத்துக்கொண்டு சமையலறைக்குள்ளே நுழைந்தாள்.

"கோலம்மா! வந்தவங்களைப் பார்த்தா நாலுநாள் சாப்பிடாதவங்க மாதிரி இருக்கான். கண்டிப்பா இவனுங்க வருமானவரி அதிகாரிங்களா இருக்க வாய்ப்பில்லே! திருடனுங்க தான்! இவங்களைத் தந்திரமா போலீஸ் கிட்டே மாட்டி விடலாம். நீ என்ன பண்ணுறே, ரெண்டு பேருக்கும் காப்பி கொண்டுபோய்க் கொடு!"

"சரிங்க!"

"இதோ பாரு! உன்னைப் பொண்ணு பார்க்க வந்தபோது கொடுத்தியே அந்த மாதிரி காப்பியை கொடுத்து ஏமாத்துற வேலையெல்லாம் வேண்டாம். நீ தினமும் போடுற காப்பி மாதிரியே போட்டுக்கொடு! முத முதலா அதைக் குடிச்சாங்கன்னா அரை மணியிலே கோமா ஸ்டேஜுக்குப் போயிருவாங்க! சரியா?"

"சரிங்க, இன்னிக்குக் காலையிலே பண்ணின ஜவ்வரிசி உப்புமா இருக்கு. கொடுக்கட்டுமா?"

"அடிப்பாவி, என்னைக் கொலைக்கேசுலே மாட்டிவிடப்போறியா? பாவம் யாரு பெத்த புள்ளைங்களோ?"

"சரி சரி, நீங்க போய்ப் பேசிட்டு இருங்க! நான் காப்பியோட வர்றேன்!"

"வெரிகுட்! இப்போதைக்கு காப்பி போதும். எனக்கு ஓவர் வயலன்ஸ் பிடிக்காது சரியா?"

குப்புசாமி உள்ளே நுழைந்ததும், வந்திருந்த அதிகாரிகள் ரகசியமாக எடுத்துக்கொண்டிருந்த குறிப்பை மறைக்க முயன்றனர்.

"மிஸ்டர் குப்புசாமி! உங்களோட அசையும் சொத்து, அசையா சொத்து பத்தின விபரம் சொல்றீங்களா?"

"சார், என் கிட்டே ஒரு செகண்ட்-ஹேண்ட் வண்டியிருக்கு சார். அதையே அசைக்கணுமுன்னா, கோவில் ஸ்பீக்கர்லே அனவுன்ஸ் பண்ணி எல்லாரும் வந்து தள்ளிவிடுவாங்க சார்! மத்தபடி எந்த சொத்தும் கிடையாது சார்!"

"நீங்க மூணு வருசமா ரிட்டர்ன்ஸ் ஃபைலே பண்ணலியே! என்ன காரணம்?"

"சார், எனக்கு வருசா வருசம் ரீஃபண்டு தான் வரும் சார்! அதை உங்க டிப்பார்ட்மென்டுலேருந்து திரும்பி வாங்குறதுக்கு அதை விட ஜாஸ்தியா செலவு பண்ணனுமேன்னு விட்டுட்டேன் சார்!"

"அது போகட்டும், திடீர்னு கொசுவண்டியோட நாத்தம் வருதே?"

"வேறொண்ணுமில்லே! என் வொய்ஃப் உங்களுக்குக் காப்பி கொண்டு வர்றா! இதோ வந்திட்டா...சாப்பிடுங்க சார்! சாப்பிட்டுக்கிட்டே சாவகாசமாப் பேசலாம்."

"மிஸ்டர் குப்புசாமி! நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு! கடமையைச் செய்யும்போது காப்பி சாப்பிடறதுல்லே...!"

"ஐயோ சார், நீங்க தப்பா நினைச்சிட்டீங்க! இது காப்பியில்லை; காப்பி மாதிரி....! சும்மா சாப்பிடுங்க! ஏன் இப்படி சந்தேகமாப் பார்க்கறீங்க? ஒருவேளை மயக்க மருந்து கலந்திருக்குமொன்னு சந்தேகமா?" என்று கேட்ட குப்புசாமி, இரண்டு காப்பியிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் டபராவில் ஊற்றிக் குடித்தார்.

"இப்போ சந்தேகம் தீர்ந்திருக்குமே? சாப்பிடுங்க!" என்று சொல்லியதும், வந்தவர்கள் இருவரும் காப்பி பருகினர். பருகியதும் இருவரும் மூர்ச்சையடைந்தனர். சிறிது நேரம் கழித்து இருவரும் கண்விழித்தபோது....

"நான் எங்கே இருக்கேன்...?"

"நான் எங்கே இருக்கேன்...?"

"என்னங்க, போதை தெளிஞ்சிட்டதுங்க!" என்று பதறினாள் கோலம்மாள்.

"முழிச்சா நல்லது தானே?" என்று சிரித்தார் குப்புசாமி. அதற்குள் அவர்தான் தெருவிலிருப்பவர்கள் அனைவரையும் வீட்டில் கூட்டியிருந்தாரே?

"குப்புசாமி! நான் இதுவரைக்கும் யாரையுமே அடிச்சது கிடையாது. அதுனாலே முதல்லே நான் தான் இவங்களை அடிப்பேன். இந்தாங்க பத்து ரூபாய்...!" என்று ஒருவர் பணத்தை நீட்ட...

"இருபது ரூபாய் கொடுக்கிறவங்கதான் முதல்லே அடிக்கலாம்!" என்று குப்புசாமி அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

"இந்தாங்க சார்! இருபத்தி அஞ்சு ரூபாய்!" என்று காசைக்கொடுத்துவிட்டு, மயக்கம் தெளிந்து கொண்டிருந்த இருவரையும் மொத்த ஆரம்பித்தார் ஒருவர்.

போலீஸுக்கு தகவல் கொடுத்துவிட்டு, தலைக்குப் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு, தெருவிலிருக்கிற எல்லாருக்கும் வந்திருப்பவர்களை நையப்புடைக்கிற வாய்ப்பு அளித்த குப்புசாமி, வசூலான பணத்தை வழக்கம்போல கோலம்மாளிடம் கொடுத்தார்.

சிறிதுநேரத்தில் திபுதிபுவென்று போலீஸ் வந்தனர். கீழே கிடந்தவர்களைப் பார்த்தனர்....

"ஐயையோ...சார்!" என்று பதறியபடி இருவரையும் எழுப்பினார் ஒரு போலீஸ் அதிகாரி.

"யாருய்யா இவங்களை அடிச்சது? இவங்க திருடங்க இல்லை. உண்மையாகவே வருமானவரி அதிகாரிங்க! எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும்." என்று அவர் இரையவும், குப்புசாமி அரண்டு போனார்.

"சார் சார், இவங்க திருடனுங்கன்னு நினைச்சுத்தான் இப்படி அடிச்சுப்புட்டோம் சார்! மன்னிச்சிடுங்க சார்! எங்க மேலே கேஸ் போட்டுராதீங்க சார்!" என்று கெஞ்சினார்.

"இன்ஸ்பெக்டர் சார்! அவங்களை விட்டிருங்க!" என்று இரண்டு வருமான அதிகாரிகளில் சுமாராக அடிவாங்கிய ஒருவர் பேசினார். "எங்கே மேலே மிஸ்டேக் இருக்கு! வந்ததும் அடையாள அட்டையைக் காட்டியிருக்கணும். அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? யப்பா...தெருவே பேரம் பேசி மொத்தியிருக்காங்கப்பா....ஆபீஸுக்குப்போயி உடனே வி.ஆர்.எஸ்ஸுக்கு எழுதிக்கொடுக்கப்போறேன்யா...!"

"ஐயாம் சாரி சார்!" என்று குப்புசாமி கையெடுத்துக் கும்பிட்டார். "தப்பாப்புரிஞ்சுக்கிட்டோம் சார்!"

"மிஸ்டர் குப்புசாமி! ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே? எனக்குத் தெரிஞ்சு காசுகொடுத்து உதைக்கிறதுக்கு இவ்வளவு பேரு இருக்காங்கன்னு இன்னிக்குத் தான் பார்த்தேன். உங்க தெருவிலே ஒருத்தர் விடாம நவராத்திரி கொலுவுக்கு கூப்பிடுறா மாதிரி கூப்பிட்டு இந்த மொத்து மொத்தியிருக்கீங்களே! ஏன் சார் இவ்வளவு கொலைவெறி?"

"மன்னிக்கணும் சார்! ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு முன்னாள் அரசியல்வாதி வருமானவரி அதிகாரி மாதிரி வேசம்போட்டு வீடுவீடாப் போய்த் திருடினதா பேப்பரிலே படிச்சேன். ரொம்ப நாளாவே நம்மூரு அரசியல்வாதிங்களைப் போட்டு மொத்தணுமுன்னு எல்லாரையும் போல எனக்கும் ஒரு வெறி இருந்திச்சா? அதான் என்னை மாதிரியே அரசியல்வாதிங்க மேலே கடுப்பா இருக்கிறவங்களை கூப்பிட்டு ஆசை தீர உதைக்க விட்டேன். ரொம்ப வலிக்குதா சார்?"

"வலியா? கழுத்துக்குக் கீழே எல்லாம் இருக்க வேண்டிய இடத்துலே இருக்கான்னு குனிஞ்சு பார்க்க வேண்டியிருக்குய்யா....! ஆனாலும் ரெண்டு பேர் அகப்பட்டா இந்த அடியா அடிப்பீங்க?"

"வெரி வெரி சாரி சார்! உங்க புண்ணியத்துலே நிறைய பணம் வசூல் ஆயிருக்கு சார்! நீங்க அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்து போகணும் சார்! அடுத்தவாட்டி உண்மையிலேயே நல்ல காப்பியா தர்றோம் சார்!"

"கா...ப்...பியா....?" இரண்டு அதிகாரிகளும் மீண்டும் மூர்ச்சையடைந்தனர்.

இன்ஸ்பெக்டர் அவர்களது நாடித்துடிப்பைப் பரிசோதித்துவிட்டு, தொப்பியைக் கழற்றிவிட்டு சொன்னார்.

"ஐயாம் சாரி!"

பி.கு: இதுலே எதுக்கு ஸ்ரேயா படம்? என்று கேட்பவர்களுக்கு! சும்மா, ஒரு ஐதீகம் அவ்வளவு தான்!

12 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்ல ஐதீகம் தான்..
போன் பேசப்போன பொண்ணு நிஜம்மாவே வரலையே..

NaSo said...

நல்லாருக்கு சேட்டை!

வெங்கட் நாகராஜ் said...

:) வழக்கம் போல் சேட்டையின் அதிரடி.. போன் பேசப்போன பொண்ணு - ஒரு வாரம் முடிஞ்சுதானே வருவாங்க....

வெங்கட்.

Unknown said...

பொண்ணு பேரு என்ன சேட்டை

Gayathri said...

ஹஹஹா

மாதேவி said...

அய்யய்யோ....

நான் காப்பி குடிக்க வரல்லை :))

சாந்தி மாரியப்பன் said...

ஐதீகம்ன்னு இருந்தா அதெல்லாம் மாத்தக்கூடாதுங்க :-))

Philosophy Prabhakaran said...

நான் சொல்ல நினைச்சதை ஏற்கனவே வெங்கட் சொல்லிவிட்டார்... நல்ல டைமிங்கான பதிவு...

புதிய மனிதா. said...

சேட்டை தாங்கல ..

device independent mobility said...

vara cholunga ah

அபி அப்பா said...

செம கலக்கல் சேட்டை இந்த மாதம் முழுக்க! மிக்க நன்றி! மன்னிக்கவும் தாமதமான வருகைக்கு! நல்ல கலக்கல் பதிவு!

kingraj said...

எங்க சங்கத்து உறுப்பினரை எவண்டாஅடிச்சது....
நான் உங்க சங்கத்துல சேர உறுப்பினர் அட்டை ஒன்னு கொடுங்க ......