Showing posts with label ரங்கமணிகள். Show all posts
Showing posts with label ரங்கமணிகள். Show all posts

Wednesday, December 22, 2010

சண்டேன்னா ரெண்டு

கொஞ்சம் வன்முறை, கொஞ்சம் ரொமான்ஸ், நிறைய காமெடி உள்ள பதிவு இது.

********************************************

அவன்: நாம ரெண்டு பேரும் வேற வேற சாதி

அவள்: ஆமா. நீ ஆண் சாதி நான் பெண் சாதி

அவன்: நாங்க நான் veg சாப்பிடுவோம்

அவள்: நானும்தான், அதான் ஒந்தலையைத் தின்கிறேனே, புரியல, I am eating your brain

அவன்: ஒங்க வீட்ல ஒத்துப்பாங்களா?

அவள்: ஒனக்கு விருப்பமா இல்லயா, அதச் சொல்லு

அவன்: எங்கம்மா என்ன சொல்வாங்களோ?

அவள்: அத்தகிட்ட நான் பேசறேன்

அவன்: நீ ரொம்ப fastஆ போற

அவள்: ஆமாம். ஒனக்கும் சேர்த்து ஈடு கட்டணும்ல

அவன்: நாளைக்குக் குழந்த பிறக்கும், அதுக்கு எப்படி கல்யாணம் காட்சி எல்லாம்

அவள்: ஆமாம். ஒன்ன மாதிரி இருந்தா சிரமம்தான். குழந்தய என்ன மாதிரி வளத்துக்கறேன்

அவன்: அப்ப நீ ஒரு முடிவோடதான் இருக்க

அவள்: நாளைக்கி நீ ஒங்கம்மாவோட எங்க வீட்டுக்கு வரியா இல்ல நான் எங்கப்பாவோட ஒன் வீட்டுக்கு வரட்டுமா?

"இங்க வாயேன், இதப்படி" என்றான் அந்த மாத சஞ்சிகையின் ஒரு பக்கத்தைக் காட்டி.

ஒரு கையில் பூரிக்கட்டையும் இன்னொரு கையில் தேங்காயுமாகக் கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

" அது ரெண்டையும் வச்சிட்டுத்தான் வாயேன்" என்றான் ஒரு எச்சரிக்கை உணர்வோடு.

படித்துப் பார்த்துவிட்டு nice என்றாள்.

" இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் தொடை நடுங்கிகள்" என்றாள்.

"அதெல்லாம் கெடையாது. அந்தப் பொண்ணுதான் அந்தப் பையன் மேல மேல வந்து விழுந்தாங்கற மாதிரிதான் எனக்குப் படுது" என்றான்.

விறுவிறு என்று கிச்சனுக்குச் சென்றவள் பூரிக்கட்டையுடன் திரும்பிப் பார்த்து, "எலி, தான் சிக்கிக்கப் போறது தெரியாம பொறியச் சுத்தி சுத்தி வரும்" என்றாள்.

"இதுக்கு நீ அந்த பூரிக்கட்டயாலயே என்னய அடிச்சிருக்கலாம்" என்றான்.

அப்போது பார்த்து காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தால் எதிர்வீட்டு கிரி.

"சார், ஒங்க வீட்டு எலிப்பொறி கொஞ்சம் தாங்க, எங்க வீட்ல ஒரே எலித்தொல்ல" என்றார்.

"அவரையெல்லாம் தர முடியாது" என்றாள் அவசர அவசரமாக. உடன் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

கிரி ஏதோ பேச வாயெடுக்குமுன் அவன் இடைமறித்து, "அது மேல பரண்ல இருக்கு சார். இப்ப கைல இல்லங்கறத அப்டி சொல்றாங்க, நான் என் பையன்ட்ட குடுத்து அனுப்பறேன் சார்" என்றான்.

அவர் சென்ற பிறகு அவனுக்கு நறுக்கென்று ஒரு குட்டு விழுந்தது. என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள் இன்னொன்று.

"சண்டேன்னா ரெண்டு" என்றாள்.

மறுபடியும் காலிங் பெல். கதவு திறந்தால் பையன்.

"அப்பா கிரி அங்கிள் எலிப்பொறி கேக்குறார். அந்த அங்கிளுக்கு எப்படிப்பா தெரியும் நம்ம வீட்டுல எலிப்பொறி இருக்குன்னு" என்றான்.

அவன் சண்டே டைம் பத்திரிக்கையில் முகத்தை மறைத்துக் கொண்டான். அவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு பூரி உருட்ட ஆரம்பித்தாள்.

"இன்னிக்கு என்னம்மா டிபன்" என்றான்.

"பொங்கலும் பூரியும்" என்றாள்.

"ஓ, சண்டேன்னா ரெண்டா" என்றான்.

கணவனும் மனைவியும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.. பையன் திருதிருவென விழிக்க ஆரம்பித்தான்.